Monday, September 7, 2009

ரெண்டு ரூபா பஸ் டிக்கட்ட ஒன்பது ரூபாய்க்கு வாங்கின கோமாளி

அது யாருன்னு கேக்கறீங்களா .. நான்தாங்க....

நடந்தது என்னனு கேளுங்க .... ஒரு வேலையா பஸ் ஸ்டாண்ட் வரையும் போக வேண்டி  இருந்ததுங்க ....

சரின்னு பஸ் ஏறினேன் ....முதல் படியில தான் கால வெச்சேன் அதுக்குள்ளே பஸ் எடுத்துட்டாங்க ... டிரைவருக்கு என்ன அவசரமோ தெரியல..
எதோ முதல் சீட்ல உக்காந்திருந்த அம்மா கை கொடுத்து தூக்கி விட்டாங்க..... 
எப்படியாவது எதாவது ஒரு கம்பிய புடிச்சு நின்னு பேலன்ஸ் பண்ணிக்கலாம்னு பாத்தா டிரைவர் ரேசுல போற மாதிரி போயிட்டு இருந்தாரு....... விட்டா டிரைவர் மடியில போய் உக்காந்துருப்பேன்..... நல்ல வேளை ஒரு கம்பிய புடிச்சு நின்னுட்டேன்... 
அதுக்குள்ள கண்டக்டரும் வந்து டிக்கெட் டிக்கேட்னு கிட்ட வந்துட்டாரு...

ஒரு கைல கம்பிய புடிச்சுக்கிட்டு இன்னொரு கையாலயும் வாயாலையும் பர்ஸ திறந்து பாத்தேன்.....
இரண்டு நூறு ருபாய் நோட்டும் ஒரு இருபது ருபாய் நோட்டும் இருந்தது... பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போறதுக்கு சார்ஜ் ரெண்டு ரூபா.. 
ஆனா என்கிட்டே ரெண்டு ரூபா சில்லரையா இல்லை....  ஒரே ஒரு ஐந்து ருபாய் காயின் மட்டுமே இருந்தது... அதை எடுத்துக் கொடுத்தேன்..
சில்லரை இல்லையானு கேட்டார்... இல்லன்னா என்றேன்.... காசை வாங்கிகிட்டு டிக்கெட்டை கொடுத்தார்...

அவருக்கு என்ன கோவமோ தெரியல.. எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்..
என்னிடம் டிக்கெட்டை கையில் திணித்து கொண்டே அருகில் இருந்தவரை பார்த்து நீங்க எல்லாம் எதுக்கையா சில்லரை இல்லாம பஸ்சுல வரீங்க... கழுத்தருக்கருக்கே வருவீங்களா என்று திட்டிக் கொண்டிருந்தார்..

எனக்கு டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி சில்லரையை கொடுக்காமல் அவர் பாட்டுக்கு பின்னாடி சென்று விட்டார்..

சரி அவரிடம் சில்லரை இல்லாமல் இருக்கும் திரும்பி வரும் போது தருவார் என்று எனக்கு நானே குருட்டு சமாதானம் சொல்லிக் கொண்டேன்...

அதற்கு பின் இரண்டு மூன்று முறை முன்னே வந்தார் அடுத்தடுத்த நிறுத்தத்தில் ஏறியவருக்கெல்லாம் டிக்கெட் கொடுத்து விட்டு சென்றார்..

அண்ணா மீதி சில்லரை என்றேன்.. அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் சென்று விட்டார்..
நான்கைந்து  முறை அவரிடம் கேட்டு விட்டேன் அதை அவர் காதில் போட்டு கொண்டதாகவே தெரியவில்லை....
பேருந்திற்குள்ளும் கூட்டம் அதிகமாயிற்று ..... மிக்ஸிக்குள் அரைக்க போட்ட தேங்காய் மாதிரி தலை சுற்றி விட்டது..  பிழிந்தெடுத்து விட்டார்கள்..

அண்ணா மீதி சில்லரை .......என்று இழுத்தேன் ...
எல்லோரும் என்னையே பார்ப்பதாக எனக்கு தோன்றியது... ச்சை.. ஒரு மூன்று ரூபாவுக்கு வேண்டி நம்ம மானம் போகணுமா என்று நினைத்து பஸ் ஸ்டாண்டிற்கு  சென்ற பிறகு எல்லாரும் இறங்கியவுடன் கண்டக்டரிடம் தனியாக கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்..

ஸ்டாண்டும் வந்தது.. எல்லாரும் இறங்கிய பின் நான் கடைசியாக இறங்கினேன் ...

எனக்கு முன்னாலே இன்னொரு பெண் அந்த கண்டக்டரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்..

நானும் என் பங்குக்கு சேர்ந்து கொண்டேன்.. அண்ணா எனக்கு நீங்க சில்லரை தரணும்.. அவர் என்னை பார்த்து முறைத்தார்... 
அந்த இடத்தில் கொஞ்சம் சத்தம் அதிகமாகவே இரண்டு மூன்று பேர் எங்களை சுற்றி  கூடி விட்டனர் ... எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது ... என்னடா இது பேசாமல் மீதியை வாங்காமல் போய் விடலாமா என்று திரும்பிய போது என் தோழி வந்தாள்....
இரண்டு ருபாய் சில்லரையாய் இல்லாததால் தானே இந்த பிரச்சனை .... பேசாமல் இரண்டு ரூபாயை கொடுத்து விட்டு நான் கொடுத்த அந்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து

அவளிடம் அவசரமாக ஒரு ரெண்டு ருபாய் இருந்தா தா என்று வாங்கி அதை அந்த கண்டக்டரிடம் கொடுத்து விட்டு என்னுடைய ஐந்து ரூபாயை கேட்டேன்...

அந்த இரண்டு ரூபாயை சண்டை போட்ட பெண்மணியிடம் கொடுத்து விட்டு இந்தாம்மா உன் கணக்கு சரியாய் போயிடுச்சா என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்..

நான் அவரிடம் கேட்டேன் ....
அண்ணா நீங்க எனக்கு சில்லரை தரணும் ....
எவ்வளவு?...
ஐந்து ருபாய்..

எதுக்கு...?

நான் உங்ககிட்ட ஏழு ருபாய் தந்தேன் நீங்க எனக்கு ஐந்து ருபாய் மீதம் தரணும்...

அதற்குள் அவரை சுற்றி இரண்டு மூன்று கண்டக்டர்கள் சூழ்ந்து கொண்டார்கள்..

எத்தன ரூபா டிக்கெட் வாங்கினே ?

இரண்டு ரூபா டிக்கெட்..

அதுக்கு எதுக்கு ஏழு ருபாய் கொடுத்தே?

கரகாட்டக்காரன் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் பழக் காமெடியை போல் ஆகி விட்டது என் நிலைமை .....
நடந்ததை மறுபடியும் விளக்கினேன்... அவர் என்னிடம் ஐந்து ருபாய் வாங்கவே இல்லை என்று சாதித்தார்...

எனக்கு சாதகமா பதில் சொல்ல என்னுடன் பஸ்சில் இருந்தவர்கள் யாரும் இல்லை ... நான் அவரிடம் சொன்னேன்...

 அண்ணா நான் எதுக்குன்னா உங்கள ஏமாத்தனும்... பாருங்க  என்கிட்டே எத்தன ரூபா இருக்குன்னு என்று என் பர்சை திறந்து காண்பித்தேன் ...

அவரும் அவர் பங்குக்கு அவர் கண்டக்டர் பர்சை திறந்து காண்பித்து  என்னிடமும் இத்தனை சில்லரை இருக்கும் போது நான் மட்டும் உன்னை ஏன் ஏமாத்த  போறேன் என்று வாதாடினார்..

அவருக்கு சப்போர்ட்டாக மத்த கண்டக்டர்களும் சேர்ந்து கொண்டனர்.. அவர்கள் குரல் ஓங்கி நிற்கவே நான் இதற்க்கு மேல் சத்தம் போட வேண்டம் என்று ஒதுங்கி வந்து விட்டேன்...
என்னை சுற்றி அனைவரும் ஆண்கள்... அவர்களோடு சண்டை போடவும் உண்மையாக  கொஞ்சம் பயமாகவும்  இருந்தது..  
என் தோழியோடு வீடு வந்து சேர்ந்தேன்...
கடையில் சில்லரையை மாற்றி என் தோழியிடம் வாங்கிய இரண்டு ரூபாயை கொடுத்து விட்டேன்.. அவள் வேண்டாம் என்றுதான் சொன்னாள்... 
இரண்டு ருபாய் என்றாலும் அதற்கும் மதிப்பு உண்டுதானே  ... அதற்காகத்தானே  அந்த கண்டக்டர் என்னை ஏமாற்றினார்...




2 comments:

  1. இப்போதெல்லாம் அடிக்கடி கண்டக்டர்கள் இவ்வாறு செய்கின்றனர். கோவையில் எனக்கு இரண்டு மூன்று தடவை இந்த அனுபவம் ஏற்பட்டது. சில்லறை திருப்பி கொடுப்பதே இல்லை. கேட்டால் முறைக்கவும் செய்கின்றனர். அசிங்கம் என நாம் ஒதுங்கி போவதாலெயே இம்மாதிரி நடக்கிறது. நீங்கள் சண்டைப்போட்டும் அந்த கண்டக்டர் கூட இருந்தவர்களின் ஆதரவால் உங்களை ஏமாற்றிவிட்டார்.

    அதை வைத்து கோட்டைக்கட்டுவானா என நாம் நினைப்போம். ஆனால் மனசாட்சி இல்லாமல் நடப்பது இப்போது மிகவும் அதிகமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  2. இந்த இடத்துல ரெண்டு ரூபாயை பாக்காதீங்க, அது நம்ப பணம், பிச்சைகாரருக்கு போட்டாலும் போடலாம், நம்மை ஏமாத்தி போக விடக்கூடாது. நான் பலதடவை சத்தம் போட்டு கேட்டு வாங்கிடுவேன். நம்ம காசை நாம கேக்கர்துக்கு வெட்கமே படக்கூடாது!..

    ReplyDelete