Wednesday, August 26, 2009

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ரொம்ப டென்சனா இருக்கீங்களா .... வாங்க கொஞ்சம் சிரிப்போம் ...டென்சன குறைப்போம் .........


பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்:  சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?

பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.

பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்....

டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன் .
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..

டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....


பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க...

இனி வீட்ல நடக்குற ஜோக்குங்கள பாருங்கோ

நண்பர் : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?
கணவன் : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..

 
கணவன் : இன்னையில இருந்து என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் :ஏன் ?
கணவன் : நேத்துதான் என் பொண்டாட்டி மண்டைய போட்டா ...

கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் ...

நண்பர் : உங்க மனைவி கெணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்தல ?
கணவன் : நீங்க உணர்ச்சி வசப் படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..

தோழி ; உன் புருஷன் தொவைக்கும் போது ஏன் நைட்டி போட்டுக்கராரு?
மனைவி : தூரத்தில இருந்து பாக்கும் போது என்ன மாதிரி தெரியரதுக்காம்......


என்ன சிரிச்சீங்களா டென்ஷன் கொறஞ்சுதா .......இனி நாளைக்கும் கொஞ்சம் சிரிப்போம் ...
நாளை சந்திப்போமா நேயர்களே ......

Monday, August 24, 2009

நன்மை செய்தால் நன்மை உண்டாகும்

"என்னங்க வெளிய கெளம்பிட்டு இருக்கீங்களா "
"ஆமா மங்களம் நம்ம நடராஜன பாத்துட்டு வரலாமுன்னு கெளம்பறேன்"
"சரிங்க, அப்ப கடைத் தெரு வழியாத்தானே போவீங்க"
"ஆமா மங்களம் எதாவது வாங்கிட்டு வரணுமா"
"ஆமாங்க மாசக் கடைசி வேற , எல்லா பொருளும் தீர்ந்துடுச்சு, எதோ இருந்தத வெச்சு மதிய பொழுதுக்கும் சமச்சுட்டேன்... இனி அரிசி வாங்கிட்டு வந்தாதான் இராப்பொழுதுக்கு
எதாவது செய்ய முடியும்.."
"சரி மங்களம் வாங்கிட்டு வரேன் கெளம்பட்டுமா"
"சரிங்க" என்றவள் திடீரென வாசலுக்கு வெளியே பார்த்து சத்தமிட்டாள்.
"டேய் .. நந்து ஏண்டா அந்த மாட்டை பாவம் இப்படி அடிச்சு இழுத்துட்டு போறே"
"நீ சும்மா இருக்கா ....இதுகளையெல்லாம் இப்படி வெச்சுகிட்டாதான் சொன்னபடி கேட்கும்"
என்று கூறிவிட்டு அடுத்த பேச்சுக்கு காத்திராமல் ஹோய் ஹோய் என்று சத்தமிட்டு கொண்டே ஆடுகளையும் மாடுகளையும் வீட்டிற்கு விரட்டி சென்றான்...

அவனுடைய அந்த அதட்டல் குரலிலேயே அவைகள் தலைதெறிக்க ஓடின...
பாவம் இரண்டு கால்களும் சேர்த்து கட்டப்பட்டு நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் விழுந்து புரண்டு சென்றன.....
வேற எதுவும் சொல்ல முடியாமல் அவைகளை பாவமாக பார்த்து கொண்டு இருந்தாள் மங்களம்.....
"உனக்கு எதுக்கு மங்களம் இதெல்லாம்....நீ சும்மா இருக்க மாட்டியா"
'பின்ன என்னங்க இந்த நந்துவுக்கு என்ன வயசிருக்கும் பன்னண்டோ பதிமூனோ இருக்கும்... இந்த வயசிலேயே அம்மாவோட பொழப்ப கையில எடுத்துகிட்டான்..
அம்மாவோட பொழப்ப கையில எடுத்துகிட்டாலும் பரவால்ல அப்படியே அந்த அரக்க குணத்தையும் இல்ல கையில எடுத்துருக்கான் ..."

"அவன் அம்மாதான் அந்த வாயில்லா ஜீவன்கள போட்டு அடிச்சு இம்சை படுத்தறான்னா இந்த பொடியன் இவன் பங்குக்கும் அதுகள கஷ்ட படுத்துகிறான்..
சம்பாரிச்சு கொடுக்கற ஜீவன்களாச்சேன்னு கொஞ்சமாச்சும் பரிவு காட்டலாமில்லே"

"சரி விடு மங்களம் அவங்க பொழப்பு அப்படி அதான் அவுங்க அப்படி நடந்துக்குறாங்க "
"என்னங்க நீங்க இப்படி பேசறீங்க....
ஊர் உலகத்துல யாரும் ஆடு மாடு வளத்தறதே இல்லையா.... நம்ம வீட்லயும் தான் இருக்கு ...எல்லாரும் இப்படியா அந்த பிராணிகள கொடும படுத்தறாங்க"

"இவளும் ரெண்டு புள்ளைய பெத்தவதானே, ஒவ்வொரு உயிருக்கும் வலின்னு ஒண்ணு இருக்குன்னு ஏன் தெரிய மாட்டிங்குது "

"இவ பண்ற பாவத்துக்கெல்லாம் தான் அந்த ஆண்டவன் இவ புள்ளைய தண்டிச்சுட்டான் "
"இவ மூத்த புள்ளைய பாத்தீங்கில்லே குடிச்சு குடிச்சு கண்ட கண்ட நோயையும் வாங்கிகிட்டு வீட்டுக்கு ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம"

"நமக்கு எதுக்கு மங்களம் அடுத்த வீட்டு பிரச்சனை எல்லாம்"
"அதில்லீங்க நான் எதார்த்தத்ததான் சொல்றேன்,, இதோ நம்ம பின்னாடி வீட்ல இருக்காங்களே குருசாமி அவர எடுத்துகங்க...பேருதான் குருசாமி.... அர்ச்சனை,பூஜை, எல்லாம் ஊருக்குதான் உள்ளுக்குள்ள எத்தன அசிங்கம்...

அன்னதானத்துக்குனு பெரிய பெரியவங்க கொடுக்கற நன்கொடையை எல்லாம் பாதி அவுரே எடுத்துகிட்டு மீதிய கோயில்ல அன்னதானம் பண்றாரு."

"பசின்னு கோயில்ல வந்து சாப்புடற ஏழைகளுக்கு ஒரு நேரம் சாப்பாடு போட்டாலும் அது தரமா போடா வேண்டாமா ..."

"அவரு இந்த மாதிரி பண்ற பாவத்துக்கெல்லாம் தான் அந்த ஆண்டவன் அவரு புள்ளைய தண்டிச்சிட்டான் .....பாத்தீங்கில்லே அவரு புள்ளைய கை கால் வராமே எவ்வளவு கஷ்டபடுதுனு ..பாவம் அந்த புள்ளைய பாக்கும் போதெல்லாம் என் மனசு எவ்வளவு கஷ்ட படும் தெரியுங்களா "

"சரி சரி விடு மங்களம்.... நான் போயிட்டு வரேன்.."

நடந்து போகும் வழியில் மங்களம் பேசியதையே அசை போட்டுக்கொண்டே சென்றேன்....
மங்களம் இயற்கையிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவள் ....
கொஞ்சம் அதிகமாக பேசுவாளே தவிர அவளிடம் வேற எந்த குறையும் இல்லை ....

என் வீட்டிலும் ஐந்தாறு ஆடுகளும், நான்கு மாடும் இருக்கின்றன ..... எனக்கு தெரிந்த வரையில் மங்களம் அவைகளிடம் கடுமையாக நடந்து கொண்டது கிடையாது... அந்த பிராணிகளும் அவள் என்ன சொன்னாலும் கேட்கும் .... அன்பால் எதையும் சாதிக்கலாம் என்பது மங்களத்தின் கருத்து....

எங்கள் வீட்டில் செல்ல பிராணிகள் அவை.... அதுக எல்லாம் செத்தாலும் வீட்டுக்கு பின்னாடியே குழி தோண்டி பொதைப்பேனே தவிர கறிக்கட காரனுக்கு விற்க மாட்டேன் என்று சொல்லுவாள் ....

மங்களம் ஆடு மாடுகளின் பாலை விற்று காசாக்குவதில்லை... பாவம் அதோட குட்டிகள் குடிக்கறதுக்கு விடாமே அப்படி நம்ம காசு சம்பாரிக்க வேண்டாம் என்று சொல்லுவாள்...

யோசித்து கொண்டே சென்றதில் நடராஜனின் வீடு வந்திருந்தது... அவரிடம் பேசி விட்டு வீடு திரும்புகையில் மணி ஒன்பதை தாண்டி இருந்தது...

வழியில் ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் குளிரில் நடுங்கிக்கொண்டே சுருங்கி படுத்துக்கொண்டிருந்தான் .......
பார்க்க பாவமாக இருந்ததால் அவனை எழுப்பிக்கேட்டேன் ....

"தம்பி உனக்கு அம்மா அப்பா சொந்தம் யாரும் இல்லையா ஏன் இங்க வந்து படுத்து இருக்கேன்னு கேட்டேன் "

அவன் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் "ரொம்ப பசிக்குது" என்றான்......
உடனே நான் என் சட்டை பையைத் தொட்டு பார்த்தேன்... அதற்கு மேல் யோசிக்காமல்

"சரி வா என் கூட" என்று சொல்லி அவன் கையை பிடித்து அழைத்து சென்றேன்...
அவன் கை குளிரில் நடுங்கி கொண்டிருந்தது...

போகும் வழியில் சாலையோர கடையில் ஒரு சால்வையை வாங்கி அவனுக்கு போர்த்தி விட்டேன்.....
என்னிடம் மீதம் இருந்த பணத்தில் அவனுக்கு சாப்பிட வாங்கி கொடுத்து விட்டு ஐந்து ரூபாய்க்கு சாக்கலேட்டையும் வாங்கி அவன் சட்டை பையில் திணித்து விட்டு வந்தேன்..
வீட்டு வாசற்படியில் கால் வைக்கும் போதுதான் அரிசி வாங்க வேண்டும் என்பது ஞாபகம் வந்தது...

மங்களத்திடம் என்ன சொல்வது என்று யோசித்து கொண்டே உள்ளே சென்றேன்...
"என்னங்க இவ்வளவு நேரம்..... உங்களுக்கு உங்க நண்பர்கள பாத்துட்டா போதுமே நேரம் போறதே தெரியாதே... "
"சரி சரி வாங்க சாப்பிடலாம்..."
"மங்களம் அது வந்து......"
"என்னங்க யோசனை..... ஆங் சொல்ல மறந்துட்டனே நம்ம பக்கத்துக்கு வீட்டு ராஜுவுக்கு இன்னைக்கு பிறந்த நாளாம்....
அவனுக்கு ஸ்கூல் இருந்ததாலே சாயங்காலமா பாயாசம், பிரியாணி எல்லாம் செஞ்சாங்களாம்.... ராஜு வந்து குடுத்துட்டு போனாங்க...... வாங்க சாப்படலாம் சூடா இருக்கு..."

மட மடவென பிரியாணி பரிமாற ஆரம்பித்தாள்.... நான் சட்டையை கழற்றி சுவற்றில் மாட்டி கொண்டே மனதுக்குள் எண்ணிக் கொண்டேன் "நன்மை செய்தால் நன்மையே விளையும்" என்று.......

சாப்பிட்டு முடிவதற்குள் நடந்த எல்லாவற்றையும் மங்களத்திடம் கூறினேன்...
எல்லாவற்றையும் கேட்டு விட்டு மங்களம் என்னிடம் "என்னங்கே அந்த பையன வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க வேண்டியதுதானே ....... நம்ம செல்வி தம்பி பாப்பா வேணும் தம்பி பாப்பா வேணும்னு கேட்டுட்டே இருந்தா....."

மங்களம் எனக்கு மனைவியாக கிடைத்ததற்கு நான் ஆண்டவனிடம் நன்றி தெரிவித்துக் கொண்டேன்...

Sunday, August 9, 2009

இன்னாப்பா ஒரே பேஜாரா கீது....

எம்பேரு கொருக்கு பேட்ட கஜா

இன்னா பேஜார்னாக்கா,நீ கேக்கறயேன்றதுக்கொசரம் உன் கையில மட்டும் சொல்றேன்....

நம்ம பேட்டையில கொக்கி குமாரு ஊட்டாண்ட நா டாவு கட்டிக்கீனுருக்கற சரோசா சரோசானு ஒரு பிகரு இருக்கீதுப்பா..... சொம்மா சொல்லக் கூடாது அதக் கண்டுக்கனுதிலருந்து என் மன்சு என்னாண்ட இல்லப்பா.......

குமாரு ஊட்டாண்ட நா போக சொல்ல அது என்ன சும்மாங்காட்டியும் பாத்து பாத்து சிரிச்சிது....அய்யாவுக்கு லவ் மூடு ஸ்டாட் ஆயிடுச்சி...

நம்மளும் சும்மா காஞ்சு போன தோல் செருப்பாட்ட வெறப்பா இருக்க கூடாதுன்னு கவுண்டமணி அண்ணாத்தே மாறி அப்பட்யே சோக்கா ஒரு ரொமான்டிக் லுக்கு உட்டேன்...இன்னா அதிசயம்பா என்கு கூட பிகரு உஷராயிடுச்சு...

சரோசாவ நாலு எடத்துக்கு இட்டாந்து சோக்கா சுத்திக் காட்லாமுனு நென்ச்சு நம்ம மெரினா பீச்சாண்ட இட்டாந்தேன்..

சரோசாவுக்கு மல்லியப்பூவும் வருத்த கடலையும் வாங்கி குடுத்து பேசிக்குனு இருந்தேன்ப்பா.....

திடீர்னு பாத்தாக்க எங்களுக்கு எதிராண்ட ரெண்டு போலீசு காரவுக நின்னுகிட்டு இருந்தாக.... இன்னா சார்னு நான் மருவாதையா தான்பா கேட்டேன் ....."டே எந்திரீடா..... எங்கிருந்துடா இவள தள்ளிட்டு வந்தே.. ஓடுடா இங்கிருந்துனு எங்கள வெரட்டி உட்டுட்டாங்கபா..

சரி போவுது சரோசா கண்ணு.... வா நம்ம ஊட்டுக்கு போவோமுன்னு பஸ்சுல இஸ்துகினு வர சொல்ல, அந்த பஸ்சுல வந்த பயலுவெல்லாம் எங்களையே பாத்துக்கினே வந்ததுக...

அப்போ சரோசா என்ன பாத்து ஒன்னி கேட்டுச்சு, "இன்ன மாமா இதுக்கு மின்ன இவுக ஆம்பளயையும், பொம்பலயையும் பாத்ததே இல்லையானு"..

போவட்டும் உடு சரோசா கண்ணுன்னு சொல்லி நம்ம பேட்டயாண்டம் இஸ்துகினு வந்தேன்...அங்க ஒரு சொவுரு இருந்துச்சுப்பா....

சரீ ஊட்டாண்ட வந்துட்டமே ஊட்டுக்கு போனா பேச முடியாதேன்னு அந்த சொவுத்துகிட்டயே வெச்சு சரோசாண்ட ரெண்டு வார்த்த ஆசயா பேசிப்புடலாமுனு பாத்தா நம்மள கிராஸ் பண்ணி ரெண்டு மாமிக போனாங்கப்பா ...

போகயில அவுக, "இதுகளுக்கெல்லாம் வேற வேலையே இல்ல எப்ப பாரு எதாவது ஒரு செவுத்துக்கிட்ட நின்னு பேசிட்டு இருக்குதுக....அப்புடி இப்புடின்னு ரோட்டு வழியா நடக்கவே முடியலனு சொல்லிட்டு போவுதுக "......

இன்னாடா ஒரே பேஜாரா கீதேன்னு சரி அங்க நின்னு பேச வேண்டாமுன்னு கோயிலாண்டம் இட்டாந்தேன்...

அங்க வெச்சு ரெண்டு வார்த்த பேசி புடலாமுனு பார்த்தா ஒரு பெருசு நம்மள கடந்து போக சொல்லோ அது கையாலேயே அது தலையில தட்டிகினு,

"இந்த வயசு பசங்க புள்ளைகளோட தொந்தரவு தாங்க முடியல... இதுகெல்லாம் காதலிக்குதாம்... போய் சீக்கரமா கல்யாணம் பண்ண வேண்டியதுதானேன்னு" சொல்லிட்டு போகுதுப்பா , அந்த பெருசுக்கு நான் இன்னாப்பா த்ரோவம் பண்ணேன் ........

இன்னாப்பா இது ஒரே அக்கிரிமமா இருக்கீது.... எங்கள மாறி காதலிக்கருவக எல்லாம் எங்குட்டுப்பா போவறது ..

லவ்வர இஸ்துகினு வந்து கோயிலான்டையும் நின்னு பேச முடியல.... ரோட்டான்டையும் நின்னு பேச முடியல..... கடலான்டையும் ஒக்காந்து பேச முடியல...

கொயந்தீக வெலயாடனமுன்னா அதுகளுக்கு சில்ட்ரேன்ஸ் பார்க்கு கீது....

பெருசுகளுக்கு கோயில் கொளம் கீது....

எங்கள மாறி எலசுகளுக்கு டாவு கட்டறதுக்கு எதாச்சும் எடமிருந்தா சொல்லுங்குப்பா....

இன்னாப்பா ஒரே பேஜாரா கீது.....

அண்ணாத்தே படிச்சுட்டு சொம்மாங்காட்டியும் போவாமே எதுனாச்சும் ப்ளேசு இருந்தா என் கையில சொல்லிட்டு போப்பா ........

Tuesday, August 4, 2009

மனிதனே நீ மனிதனா?

தலைப்பைப் படித்து விட்டு யோசித்துப் பார்க்கிறீர்களா?
யோசித்து
உங்களுக்குள் ஒரு நல்ல முடிவை எடுத்தால் மகிழ்ச்சி.

உங்களுக்குள் இருக்கும் மனிதனை எப்பொழுதாவது தேடி இருக்கிறீர்களா?
நாளுக்கு நாள் மனிதன் எடுக்கும் ஒவ்வொரு பரிமாணத்தால் இயற்கை எத்தனை அழிவுகளை சந்தித்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்?
மனிதனே என்ன சாதித்திருக்கிறாய்?

"மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போலத் தன்னை தந்து தியாகி ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோயில் ஆகலாம்"
என்பது எவ்வளவு அழகான கண்ணதாசன் வரிகள் ஆனால் நம்மில் யாரவது இப்போது அப்படி இருக்கிறோமா?
இன்று மனிதனின் மனம் கோயில் ஆக
இல்லை
சுயநலத்தின் இருப்பிடமாக இருக்கிறது.

"
உலகம் அது அழகு கலைகளின் சுரங்கம்" ஆனால் இன்று அது அசுத்தத்தின் இருப்பிடமாக இருக்கிறது.

பூனையைப்
பார்த்திருக்கிறீர்களா ஐந்து அறிவுள்ள ஒரு சிறிய உயிர். அதன் நடவடிக்கைகளைக் கவனித்திருக்கீர்களா? அதற்கு இயற்கை உபாதை ஏற்படும் போது யாரும் காணாமல் மலம் கழித்து விட்டு அதை மூடி விட்டு செல்லும்...ஆனால் மனிதனோ அவசரம் என்று வந்து விட்டால் நடைபாதை ஓரங்களிலோ, செடியின் ஓரங்களிலோ எங்கு வேண்டுமானாலும் ஓடி விடுவான்

யார் தன்னை கேட்கப் போகிறார்கள் என்ற அலட்சியம்...
ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு அதான் கட்டி வைத்திருக்கிறார்களே "கட்டணக் கழிப்பிடம்" அதை உபயோகித்தால் என்ன?

ஒ!அதற்கு கட்டணம் தர வேண்டுமோ? ஆனால் இயற்கைக்கு தர வேண்டாமே! மனிதா உன்னை நீ எப்பொழுது திருத்திக் கொள்ளப் போகிறாய்?

இயற்கைக்கு
உன்னால் எவ்வளவு தீங்கு விளைகிறது என்பதற்கு ஒரு உதாரணம்....
சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று மனிதனால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்துக் குறித்து ஆய்வு ஒன்று நடத்தியது.... இயற்கை பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் அனுப்புமாறும் கேட்டிருந்தது... அதில் வெற்றி பெற்ற புகைப்படம் எது தெரியுமா? கடலுக்கடியில் வாழும் டால்பின் என்ற உயிரினம் அதன் கழுத்தில் நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கவரோடு நீந்தி வரும் காட்சிதான்..... இப்படியே போனால் உலகம் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை..



எத்தனை வகையில் இயற்கை நம்மால் பாதிக்கப்படுகிறது......
வாகனப்புகையாலும்,தொழிற்சாலை புகையாலும் காற்றுமண்டலம் அசுத்தப்படுத்தப்பட்டு இன்று ஓசோன் படலம் ஓட்டை பட்டு அடுத்த ஒரு பேரழிவுக்காகக் காத்திருக்கிறோம்.....
இயற்கையை அழித்தது போதாது என்று மனிதா நீ உன்னையே அழித்து வருகிறாய்.........
புரியவில்லையா? "தீவிரவாதம்"







இதைப் படிக்கும் போது உங்களுக்குத் தோன்றும் "ச்சே ஏன் எல்லாரும் இப்படி செய்யறாங்க" என்று....

"எல்லாரும்" என்று யோசிப்பதை விட நீங்கள் இந்த சமூகத்தில் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்....

நான் என்ன தப்பு செய்தேன் என்று நினைக்காதீர்கள்......முகம் காட்டும் கண்ணாடி முன் நின்றால் உங்கள் உருவம் தெரிகிறதா? அதைப்போல்தான் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களும் உங்களின் பிரதிபலிப்புதான்.....

நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமைதான் விளையும்...

யாரோ ஒருவரின் சுயநலத்தாலும் பணத்தாசையலும் தானே இன்று தீவிரவாதம் பெருகி வருகிறது...


ஒளி வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்த மும்பை தாஜ் ஹோட்டேல்லின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்....
இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் எத்தனை உயிரிழப்பு.....
இதன் மூலம் அவர்கள் சாதித்து கொண்டதுதான் என்ன.....
உங்களில் எத்தனைப் பேருக்கு இந்த உலகம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியும்...

அதைக் காப்பற்ற உங்களில் யாரவது முயற்சி செய்திருக்கிறீர்களா?
உங்கள் கைகளால் ஒரு மரக்கன்றை நட்டு வைத்திருக்கிறீர்களா?

அரசாங்கம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறதே "வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்" என்று செய்திருக்கிறீர்களா?

வேறொன்றும் வேண்டாம் இதைப் பற்றி விவாதித்திருப்போமா?
டீக்கடை பெஞ்சில், வீட்டுத் திண்ணயில், அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில், அலுவலகத்துக்குச் செல்லும் போது ரயிலில், பேருந்தில், எப்போதாவது விவாதித்திருப்போமா?

எங்கே அந்த நடிகர் நடிச்ச படம் ஓடலையே? அந்த நடிகை போட்டிருந்த டிரஸ் நல்லா இருந்ததில்லே? அறிவைத் தூண்டுவது பழைய பாடலா? அல்லது புதிய பாடலா? என்று பட்டி மன்றம் வைத்து பொழுதைக் கழிக்கவே நேரம் சரியாய் இருக்கிறது....

எங்கே நாம் உலகம் வெப்ப மயமாதல் பற்றி விவாதிக்கப் போகிறோம்...
ஊடகங்களிலாவது மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் எதாவது ஒரு நிகழ்ச்சிஉலகம்வெப்ப மயமாதல் பற்றி வந்ததுண்டா?

நடனப் போட்டிக்கும், பாட்டுப் போட்டிக்கும், மற்ற நிகழ்ச்சிக்கும் பணத்தை வாரி வாரி இறைக்கும் ஊடகங்கள் உலகம் வெப்ப மயமாதல் பற்றியும் ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்க செலவு செய்யலாமே?

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளின் முகப் பூச்சுக்கு ஆகும் செலவில் பாதி கூட இதற்கு ஆகாதே?

ஆறடி நிலத்துக்குள் அடங்கப் போகும் உடம்பிற்காக இன்னும் இயற்கைக்கு எத்தனை அழிவுகளை உண்டாக்கப் போகிறோம்,,,

மனிதன் தன் ஆதாயத்துக்காக தன் சுயநலத்துக்காக இயற்கையைப் பாழாக்குவது எப்படி இருக்கிறது என்று தெரியுமா.... மரத்தின் நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு அதன் அடிக் கிளையை வெட்டுவது போலாகும்..

இறுதியில் அழிவது மனிதனாகத்தான் இருக்கும்..

பணம் பணம் என்று மனிதருக்குள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அந்தக் காகிதத்தின் பின்னால் ஓடி என்ன சாதித்து விட்டோம்?......
பணம் பணம் என்று ஓடி இறுதியில் உங்கள் உதடுகள் உச்சரிக்கும் வரிகள் இதுவாகத்தான் இருக்கும்.
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..."


நண்பர்களே ! அரிதாரம் பூசி வாழும் உங்கள் முகத்திரையைக் கிழித்தெறியுங்கள்....
மனிதராக வாழுங்கள்..........

என் கருத்துக்கள் உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் பின்னூட்டம் இடவும்...நன்றி......















Saturday, August 1, 2009

நண்பனும் நானும்......

"அய்யையையோ! எப்ப பாரு எதோ ஒரு டார்செர்....ஆபீஸ்ல தான் மண்டைய பிளக்கற மாதிரி வொர்க் பிரஷர் ன்னு பார்த்தா வீட்டுக்கு வந்தா அத விட பயங்கர தொல்ல.
எப்ப பாரு கல்யாணம் பண்ணிக்கோ அத பண்ணிக்கோ இத பண்ணிக்கோன்னு தொந்தரவு பண்ணாதீங்க " என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
"என்னடா அங்க சத்தம்" என்று அவனை அழைத்து விசாரித்தேன்."பின்ன என்னடா இருக்கற ப்ரொப்லெம்ஸ் போதாதுன்னு இப்ப இது வேறயா? ஏற்கனவே வேலை பளுவுல மண்டையில இருக்கற முடியெல்லாம் உதிருது, இனி கல்யாணம்னு ஒன்ன பண்ணிகிட்டா அவ வந்த கொஞ்ச நஞ்சம் இருக்கற முடியையும் மொட்டை அடிச்சுடுவா" என்றான்.
வேலை பளு காரணமாகத்தான் அவன் இப்படி பேசுகிறான் என்று எனக்கு புரிந்தது.
அவனிடம் "சரிடா அதன் அஞ்சு நாள் சேந்த மாதிரி லீவு வருதே எங்கயாவது வெளிய போய்ட்டு வரலாம் உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் கெடச்ச மாதிரி இருக்கும் போலாமா" என்றேன்.அவனும் ஒத்துக் கொண்டான், என் அம்மா பிறந்த ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.
ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் அந்த மாட்டு வண்டி குலுங்கி கொண்டே சென்று கொண்டிருந்தது. நானும் என் நண்பனும் அதில் பயணம் செய்து கொண்டு இருந்தோம். ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமேஅந்த ஊருக்கு பேருந்து வந்து செல்லும் அதனால் மாட்டு வண்டியில் இயற்கையை ரசித்துக்கொண்டே சென்று கொண்டு இருந்தோம்.
இயற்கை அன்னையின் கண் பார்வை அந்த கிராமத்தின் மேல் அதிகமாகவே இருந்தது.
தூரத்தில் வேப்ப மரத்தில் தூளியைக் கட்டித் தன் குழந்தையைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள் ஒரு தாய்.
கோவில் என்று பெயர் ஆனால் சுற்றிலும் சுவர் எழுப்பப்படவில்லை, ஒரு கல் அதன் மேல் சிறுது குங்குமமும் மஞ்சளும் பூச பட்டிருந்தது, அதை இரண்டு பெண்கள் நின்று கும்பிட்டு கொண்டு இருந்தனர்.
சிறிது தூரம் தள்ளி சிறுவர்கள் பச்சைக்குதிரை விளையாடிக் கொண்டிருந்தனர். அநேகமா உங்களில் பலருக்குப் பச்சை குதிரை என்றால் என்ன என்று தெரியாது என நினைக்கிறேன் ஏனென்றால் தாய் மடியில் தவழும் குழந்தை கூட வீடியோ கேம்ஸ் விளையாடும் காலத்தில் இருக்கிறோம்.
ஆல மரத்தடியில் நான்கு பெரியவர்கள் இடுப்பில் ஒரு வேட்டியும் ஒட்டிய வயிறுமாக அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்.
எங்களை தவிர மாட்டு வண்டியில் ஒரு முண்டாசு கட்டிய முதியவரும், அவரது பேத்தியும் இருந்தார்கள்.
பேத்தி சுண்டி இழுக்கும் அழகு இல்லை என்றாலும் கண்களில் வசீகரிக்கும் அழகுடன் இருந்தாள்.இதை எல்லாம் பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்த பொழுது அந்தப் பெரியவர் திடீரென அமைதியைக் கலைத்தார். "தம்பி எந்த ஊர்ல இருந்து வரீங்க "என்று கேட்டார்.
"சென்னை ல இருந்து வரோம் பெரியவரே"
"நல்லது கண்ணு ஆரு ஊட்டுக்குப் போறீங்க"
"இங்க ஷண்முகநாதன் வாத்தியார் இருக்காரு இல்ல அவர் வீட்டுக்கு போறோம்"
"எதுக்காக வந்து இருக்கீக அவகளுக்கு நீங்க ஏதாவது சொந்தமா"
"ஒரு வகையில தூரத்து உறவு ரெண்டு நாள் தங்கி ஊர சுத்தி பாத்துட்டு போலாம்னு வந்தோம்"
"ஆகட்டுங் கண்ணு நம்ம வூடும் அவுக வூட்டுப் பக்கத்துலதான் இருக்கு அப்படியே நம்ம வூட்டுக்கும் வந்துட்டு போங்க"
"கண்டிப்பா வந்துட்டு போறோம்"
எங்களிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு அவரும் பேத்தியும் சென்று விட்டார்கள். செல்லும் போது பேத்தி மட்டும் கண்ணாலேயே என் நண்பனிடம் விடைப் பெற்று சென்றாள். நாங்களும் ஒரு வழியாக வாத்தியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.அவர் வீட்டில் குளித்து முடித்து சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலை நான்கு மணி அளவில் வெளியில் கிளம்பினோம்.
"மச்சான் சூப்பரா இருக்குடா ஊரு, நீ கிராமம்னு சொன்னதும் கருத்தம்மா படத்தில வர மாதிரி காஞ்ச பட்டிகாட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவியோனு நெனச்சேன் சும்மா சொல்லக் கூடாது உனக்கும் கொஞ்ச ரசன இருக்குடா"
"அத விடு ஆமா வண்டியில வரும் போது அந்தப் பெரியவரோட பேத்தி கூட கண்ணாலேயே கதக்களி ஆடிட்டு வந்தியே , என்ன விஷயம்?
"ஹி ஹி பார்த்துட்டியா அது ஒண்ணுமில்ல சும்மா உலுலாய்க்கு "
"வேண்டாண்டா வந்த எடத்தில எந்த சில்மிஷமும் பண்ணாதே"
பேசிக்கொண்டே பெரியவர் வீட்டை நெருங்கி விட்டோம், எங்களைப் பார்த்ததும் வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த பேத்தி வேகமாக உள்ளே ஓடி விட்டாள் இரண்டு நிமிடத்தில் பெரியவர் வெளியே வந்தார்,
"அடடே வாங்க தம்பிகளா வாங்க"
வேக வேகமாக துண்டை எடுத்து திண்ணையைத் துடைத்து "உக்காருங்க தம்பி " என்றார்.
"என்ன சாப்புடுறீங்க இருங்க குடிக்க எதாவது கொண்டாரா சொல்றேன்" என்று எங்களைக் கேட்காமலே உபசரித்தார்.
"அம்மா துளசி தம்பிகளுக்கு குடிக்க மோரு கொண்டாம்மா"
பெயரைக்கேட்டதும் என் நண்பனின் முகத்தில் தௌசண்ட் வாட்ட்ஸ் பல்பு எரிந்தது.
சில்வர் தம்ளரில் மோரை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஆச்சரியம்,சிறியதான மண் குடுவையில் கொண்டு வந்தாள். பச்சை மிளகாய் அறுத்து போட்டு கொத்தமல்லி மணமணக்க மோர் தித்தித்தது.
என் நண்பனின் கண்கள் அவளையே தேடிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அவரிடம் பேசி விட்டு கிளம்பினோம் செல்லும் போதாவது வெளியே வருவாள் என்று என் நண்பன் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவள் வரவில்லை.
பெரியவர் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி நடந்து இருப்போம் என் நண்பன் திரும்பி பார்ப்பதும் பின்னர் நடப்பதுமாக இருந்தான்.நான் அவனை பார்த்த போதுஅவனுடைய முகத்தில் அதே தௌசண்ட் வாட்ட்ஸ் பல்பு எரிந்தது என்ன காரணம் என்று நானும் திரும்பி பாத்தேன். அரளிப்பூ செடியின் மறைவில் நின்று அவளும் இவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஐந்து நாட்களாக ஊரை சுற்றிப்பார்த்து விட்டு இயற்கை அன்னையின் வரத்தைப்பெற்று விட்டோம். அடுத்த நாள் சென்னை திரும்பலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். செல்வதற்கு முன்பு பெரியவரிடம் சொல்லி விட்டு வரலாம் என்று சென்றோம் அவர் வீட்டுக்கு செல்கிறோம் என்று தெரிந்ததும் என் நண்பனுடைய ஒப்பனை இன்று கூடுதலாக இருந்தது. எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
பெரியவர் வீட்டு வாசலை நெருங்க நெருங்கவே அழு குரல் கேட்டது,குழப்பத்துடன் உள்ளே சென்றோம். அங்கே துளசி முழங்கால்களை கட்டி பிடித்த படி சாமிப்படத்தின் கீழ் உக்காந்து அழுது கொண்டிருந்தாள்.
"உங்க ஆத்தா போனதும் நானும் போய் சேர்ந்திருந்தா இந்த கொடுமை எல்லாம் பாக்க வேண்டி இருந்திருக்காதே இந்த வக்கத்தவன் வீட்ல வந்து என்னத்துக்கு பொறந்தே, வா ரெண்டு பெரும் போய் எதாவது ஆத்துல கொளத்துல விழுந்து சாவோம்" என்று பெரியவரும் அழுது கொண்டிருந்தார்.
எங்களைப் பார்த்ததும் பெரியவர் பெரிதாக அழத் தொடங்கினார். காரணம் விசாரித்தோம்
"என்ன தம்பி சொல்றது இவ பொறந்த இடமும் சரி இல்ல வாக்கப்பட்டு போன இடமும் சரி இல்ல" என்றார், இதை கேட்டதும் எனக்குள் சற்று அதிர்ந்தேன் நான் எதிர்ப்பார்த்து போல் என் நண்பன் திக் பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தான்.
அவளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.
"இவள நல்லா வெச்சுக்குவான்னு நெனச்சுதான் என் சொந்த அக்கா மவனுக்கே கட்டி வெச்சேன் ஆனா அந்தப் பாவி பய இவள விட்டுட்டு வேற ஒரு சிறுக்கிய வெச்சுருக்கான்,சம்பாதிக்கற எல்லாத்தையும் அவளுக்கே செலவழிச்சுட்டு இவள தினம் அடிச்சு கொடும படுத்தறான், தங்கம் மாதிரி அனுப்பி வெச்ச எம் புள்ளைய இப்படி நாசப்படுத்தி திருப்பி அனுப்பிட்டான் தம்பி...
அவன அறுத்து விட்டுட்டு என் ஒடம்புல உசிரு ஓட்டிட்டு இருக்கற வரையும் அந்த புள்ளைய நிம்மதியா வாழ வெக்கலாம்னு பாத்தா அந்த படு பாவி பய வாரம் ஒரு தடவ இங்க வந்து என் கண்ணு முன்னாடியே என் புள்ளைய பூட்டு அடிச்சு கொடும படுத்தறான் தம்பி அவள் கழுத்தில் தாலி இல்லை அதையும் அவன் கணவன் பிடுங்கி விட்டான் என்பது பின்னர் தான் தெரிந்தது.
"ஊர் பெரியவங்க எல்லாம் பேசி பாத்துடோம் தம்பி அந்த கடன்காரன் கேக்கறதா இல்ல தம்பி இந்த தள்ளாத வயசில அந்த காளியாத்தா இதை எல்லாம் பாக்க வெச்சுட்டாளே"
"காளியாத்தா எம் புள்ளைக்கு ஒரு நல்ல வழிய காட்டும்மா" என்று புலம்பிக்கொண்டே வெளியே சென்றார்.
இந்த கடைசி வரியை அவர் சொல்லும் போது துளசியின் அழுகுரல் பெரிதாக கேட்டது.
சென்னை வந்து சேரும் வரை நாங்கள் இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. மனம் கனத்து போயிருந்தது .
சென்னை காலை பத்து மணி. ஆபீசில் எதையோ பறிகொடுத்தவன் போல் அமர்ந்திருந்தான் என் நண்பன்.மதியம் உணவு இடை வேளையில் அவனிடம் பேச்சு கொடுத்தேன்,
அவனே என்னிடம் பேச ஆரம்பித்தான்,
"நான் உன்கிட்ட ஒன்னு சொல்லப்போறேன் அத நீ எப்படி எடுத்துகுவேன்னு தெரியல.... எனக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாத அனாத.. ஆனா நான் இப்ப ஒரு புது உறவ என்கூட சேர்த்துக்கலாம்னு நெனைக்கறேன்...ஆமா துளசிய நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன்..... "
"அவ கல்யாணம் ஆனவ"
"அது அவ வாழ்கையில் நடந்த ஒரு விபத்து..."
"இதுக்கு அவ ஒத்துக்குவாளா "
"கண்டிப்பா.. அவ கண்ல சோகத்தையும் மீறி காதல் தெரிஞ்சுது.. என்னமோ அவ எனக்காகவே பொறந்தவ மாதிரி தெரியுது"
"உறுத்திய இருக்கியா"
"இனி என் வாழ்கை அவ கூடத்தான்... அந்த துளசி தான் இனி என் வாழ்கையில் மணம் வீசப் போறா"
என் நண்பன் சொல்வது அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தேன்..
என் நண்பன் சொன்னதை நிறைவேற்றி விட்டான்.
"இப்பொழுது அவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது...இனிய இல்லறம்...என் நண்பன் சொன்னது போல் துளசி அவன் வாழ்கையில் அன்பு மணம் வீசிக்கொண்டிருக்கிறாள்....