Thursday, September 10, 2009

திக் திக் திக்......

வானத்தில் நிலவு அன்று விடுமுறை எடுத்து இருந்தது......
நட்சத்திரங்களும் கூட ஆப்சென்ட் ...... எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது... அவ்வப்போது மின்னல் மட்டும் தலையை காட்டி விட்டு சென்றது...
அடித்த சூறைக் காற்றில் சருகுகளும் பேப்பர்களும் தலை தெறிக்க ஓடின ...
காரின் கண்ணாடிகளை ஏற்றி விட்டுக் கொண்டேன்  ... ஏக்சிலிரேட்டரில் காலை வைத்து  மிதித்தேன்  ... வண்டி வேகம் எடுத்து மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து சென்ற   மண் சாலையில் செல்ல ஆரம்பித்தது ... சிறிது தூரம் சென்றதும் வண்டி வித விதமான சத்தம் கொடுத்து விட்டு இனி நகர மாட்டேன் என்று நின்று விட்டது..அடச்சே..... சரியான நேரம் பாத்து கார் கால வாருதே... காரை லாக் செய்து விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன் ...
மழை துளி சில்லென்று முகத்தில் விழுந்தது...
அடக் கடவுளே இந்த நேரத்தில் வீட்ல இருந்து வெளிய வந்தது தப்போ ?
கையில் கட்டி இருந்த வாட்சை திருப்பி மணியை பார்த்தேன் ... அது ரேடியம் உபயத்தில் 10.50 என்று காட்டியது...
வேகமாக ஓடினால் கூட  போய் சேர இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுமே...
உதவிக்கு யாரையாவது கூப்பிட முடியுமான்னு கொஞ்ச தூரம் போய் பாக்கலாம்...
மழை வேகம் எடுத்தது... முற்றிலுமாக என்னை நனைத்தது....
ரெண்டு நாள் புயல் மழை பெய்யும்னு நியூஸ்ல வேற  சொன்னாங்க... இன்னைக்கே அப்படி அங்கே போய் ஆகணுமா ?   மனதுக்குள் நினைத்து கொண்டேன் ..
அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் காற்று பின்னால் தள்ளியது...
முயற்சியை கை விடாமல் நடக்க ஆரம்பித்தேன்..
அவ்வப்போது அடித்த மின்னல் வெளிச்சத்தில் மட்டுமே பாதை தெரிந்தது... காற்றில் மரங்கள் அசைவது ஒருவித கிலியை ஏற்படுத்தியது....
எப்படியாவது போயே தீர வேண்டும் மனதுக்குள் எண்ணிக் கொண்டே சென்றேன்..
யாரது..?
திடீரென்று பின்னால் இருந்து கரகரத்து போன குரல் கேட்க திக்கித்து போனேன்...
மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பினேன்..
கருப்பு நிறத்தில் ஒரு சால்வையை போர்த்திக் கொண்டு கையில் டார்ச்சுடன் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் நின்றிருந்தார்..
என் முகத்தில் டார்ச் லைட்டின் ஒளி வட்டத்தை செலுத்திக் கொண்டே கேட்டார்..
யார் நீங்க? இந்த நேரத்தில தனியா அதுவும் இந்த வழியா போறீங்க?
அய்யா ! இந்த வழியா எதாவது ஒர்க் ஷாப் இருக்குங்களா ?
இந்த வழியா வீடுகளே கிடையாது.. அப்பறம் எப்படி ஒர்க் ஷாப் இருக்க போகுது...?
நான் என் அத்தை வீட்டுக்கு கிளம்பி போயிட்டிருந்தேன்... வர வழியில மழை வேகமா வர ஆரம்பிச்சிடிச்சி .. சரி சீக்ரமா போலாம்னு இந்த குறுக்கு பாதையில வந்தேன் .. என் நேரம் கார் வேற பிரேக் டவுன் ஆயிடுச்சு..
இதப் பாருங்க உங்க நல்லதுக்காகத்தான்  சொல்றேன்...வந்த வழியாவே திரும்பி போய்டுங்க..மேற்க்கொண்டு இந்த வழியா தொடர்ந்து போகாதீங்க...
 ஏன் அப்படி சொல்றீங்க?
இந்த வழியா போனா எந்த வீடுகளும் கிடையாது.. மிஞ்சி மிஞ்சிப் போனா மெயின் ரோடுகிட்ட போனாதான் ஓரிரு வீடுகள் இருக்கும்..மெயின் ரோடுகிட்ட போகனும்னாலே நீங்க இன்னும் நாலு மணி நேரம் நடக்கணும்..அதுவும் இந்த வழியா போனா அப்பறம் உங்க உயிருக்கு நான் உத்தரவாதம் கிடையாது..
ஐ....ஐ...ஐயா ...ஏன் அப்படி சொல்றீங்க ?
இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு சுடுகாடு வரும்.. அங்க பகல் நேரத்திலேயே ஆவிகள் நடமாடறதா சொல்றாங்க ....இதுவரைக்கும் பன்னிரண்டு பேரு ஆவி அடிச்சு இறந்து போயிருக்காங்க .... ஆனா நீங்க இந்த அகால நேரத்தில தனியா போறேன்னு சொல்றீங்க.. வந்த வழியாவே திரும்பி போயிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்...
என் உடல் முழுவதும் வெள்ளமாய் வியர்வை...இதயம் ஹை ஸ்பீடில் துடித்து கொண்டிருந்தது...
பேசாமல் திரும்பி போய் விடலாமா ? போனால் மட்டும் வீட்டிற்க்கு எப்படி போவது..?எத்தனை தூரம் நடப்பது...பேசாமல் அந்த பெரியவரிடமே எதாவது உதவி கேட்கலாம் என்று வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தேன்...
மழையின் வேகம் சற்று குறைந்திருந்தது..
கிட்டத்தட்ட ஓடுவதைப் போல் நடந்தேன்.. வழி முழுவதும் சேரும் சகதியும் காலை இடறி விட்டது..
கொஞ்ச தூரம் வந்திருப்பேன்... அந்த பெரியவரைக் காணவில்லை...என்ன அதிசயம் இவ்வளவு வேகத்தில் சென்று விட்டாரா.? அதெப்படி நான் இவ்வளவு வேகமாக ஓடி வந்தே இவ்வளவு தூரம் தான் வந்திருக்கிறேன்,,, இந்த தள்ளாத வயதில் அந்த பெரியவர் எப்படி போயிருக்க முடியும்...
மனதிற்குள் பயம் முளை விட்டது....
அங்கேயே நின்று திரும்பி பார்த்தேன்...பெரிய பெரிய மரங்கள் கிளைகளை கை கால்களை  போல் ஆட்டிக் கொண்டிருந்தன.. 
இனி இவ்விடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்க கூடாது பேசாமல் காருக்குள்ளேயே போய் உக்கார்ந்து கொள்ளலாம் என்று வேகமாக காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..
கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தேன்.. உறைந்து போனேன்... காரின் ஹெட் லைட்டுகள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தன..
பயத்தில் என் இருதயம் துடிக்கும் சத்தம் எனக்கே கேட்டது...கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.. மழை சுத்தமாக நின்றிருந்தது...
அதெப்படி நான் வரும் போது விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்டு காரை லாக் செய்து விட்டுத்தானே வந்தேன்..
பி..பி..பின்.. எப்..எப்படி..?
காரின் அருகில் சென்று பார்க்கலாமா?
மனதிற்குள் நினைத்தாலும் பயத்தால் கால்கள் நகர மறுத்தன..
எச்சிலை விழுங்கிக் கொண்டே மெல்ல மெல்ல முன்னே சென்றேன்... காரின் பானட்டில் கை வைத்ததும் விளக்குகள் அணைந்து விட்டது...
காரின் கதவிடம் வந்தேன்.. அந்த மழைக் குளிரிலும் என் உடல் தெப்பமாய் வியர்த்திருந்தது..
மெல்ல கார் கைப்பிடியை திருகினேன்.. ப்ளக் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது...
லாக் செய்த கதவுகள் எப்படி திறக்கும்? ஒரு வேலை சரியாக லாக் செய்யாமல் விட்டிருப்பேனா ?
மெல்லக் கதவை திறந்தேன்... உள்ளே விளக்கு எரிந்தது... அங்கே...அங்கே... ஒரு உருவம் காரின் பின் சீட்டில் உட்க்கார்ந்திருந்தது ....
இதயம் துடிக்க மறுத்தது.. 
முகம் முழுவதும் அழுகிய நிலையில் அந்த உருவம்  என்னை பார்த்து சிரித்தது...
விழுந்தடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தேன்.. எவ்வளவு தூரம் ஓடி வந்தேன்... தெரியவில்லை..
அந்த குறுக்கு பாதையில்  இருந்து விலகி செடி கொடிகளுக்கிடையில் ஓடி வந்திருந்தேன்...
தூரத்தில் சின்னதாய் ஒரு வெளிச்சம் தெரிந்தது... எதாவது வீடாக இருந்தால் உதவி கேட்கலாம் என்று வெளிச்சத்தை நோக்கி ஓடினேன்..
கிட்ட வர வரத்தான் அது ஒரு பெரிய பங்களா என்று தெரிந்தது... இருட்டில் பெரியதாக பார்பதற்க்கே பயமாக இருந்தது... அதன் கேட்டில் தான் அந்த சின்ன சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது... 
பங்களாவின் சுவரெங்கும் செடி கொடிகள் படர்ந்திருந்தது...
உள்ளே போகலாமா வேண்டாமா ?
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  கேட்டைத் திறந்தேன்... அந்த கேட் ஒரு நாராசமான ஒலியை எழுப்பியது..  உள்ளே நுழைந்தேன்.. 
பங்களாவை சுற்றிலும் செடிகள் ஆளுயரத்திற்கு வளர்ந்து இருந்தது..  மெல்ல மெல்ல நடந்தேன்... இரண்டடிகள் முன்னே சென்றதும் ஏதோ ஒன்று வெள்ளையாய் நீளமாய் தெரிந்தது..என்ன அது ? அது ஒரு கல்லறை .. அங்கங்கே இடிந்து சிதிலமாய் காட்சியளித்தது... என்  உள்மனது என்னை எச்சரித்தது.. வேண்டம் இனி ஒரு அடி கூட முன்னே எடுத்து வைக்காதே..
ஆனால் இந்த அடை மழையிலும் இங்கே விளக்கு எரிகிறது என்றால் இங்கே ஆள் இல்லாமலா இருப்பார்கள்.. இறுதியாக ஒரு முறை உள்ளே சென்று பார்த்து விடுவது என்று முடிவெடுத்து உள்ளே சென்றேன்.. 
பங்களாவின் கதவுகள் திறந்துதான் இருந்தது.. குரல் கொடுத்தேன்.. 
உள்ளே உள்ளே யாரவது இருக்கீங்களா ?
ஒரே நிசப்தம்...
மீண்டும் குரல் கொடுத்தேன்..
அதே  நிசப்தம்...
ஆனால் மாடியில் எதோ சத்தம் கேட்க  படிகள் ஏறி மாடிக்கு சென்றேன்... ஐந்தாறு அறைகள் நீளமாக இருந்தன..
பங்களா முழுவதும் வெளிச்சம் இன்றி இருளில் இருந்தது.. இருட்டிலேயே இருந்ததால் கண்கள் இருட்டுக்கு பழகி இருந்தது..அந்தக் கடைசி அறையில் இருந்து எதோ நகர்த்தும் சத்தம் கேட்டது.. அறைக் கதவின் வெளியே நின்று  குரல் கொடுத்தேன் உள்ளே யாராவது இருக்கீங்களா?
சத்தம் நின்று விட்டது...
கதவை திறந்தேன் அறை எந்த பொருள்களும் இன்றி வெறுமையாக இருந்தது.. ஜன்னல் அருகே சென்றேன் ... எல்லா இடமும் வெறுமை.. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது..
வேண்டாம் இங்கிருந்து சென்று விடலாம் என்று திரும்ப முயற்ச்சித்த போது என் முதுகுக்கு பின்னல் என் கழுத்தருகே யாரோ கோவமாய் மூச்சு விடும் சத்தம்....
என் கை கால்கள் உதற ஆரம்பித்தன.. நரம்பு மண்டலங்கள் வெடித்து சிதறி விடும் போல இருந்தது... மெல்ல திரும்பினேன்... அவ்வளவுதான்..
கண் விழித்து பார்த்த போது நான் என் அறையில் என் படுக்கையில் இருந்தேன்.. அப்போது நான் கண்டது எல்லாம் கனவா.....
 

2 comments:

  1. Hoi,

    Enakum ithu pola niraya anupavam undu,aanal ivlo alahaai vaarthai halaal kanavukku uyir thanthu vitteerhal, Arumai....

    Nallathambi

    ReplyDelete
  2. வாங்க நல்ல தம்பி... எப்படி இருக்கீங்க... உங்க பொன்னான வரவுக்கு நன்றி....

    ReplyDelete